மோட்டார்சைக்கிள், லாரி தீப்பிடித்து எரிந்தன; முதியவர் பலி

சமயநல்லூர் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள், லாரி தீப்பிடித்து எரிந்தன. முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-08-11 20:44 GMT

வாடிப்பட்டி, 

சமயநல்லூர் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள், லாரி தீப்பிடித்து எரிந்தன. முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள் புரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சிபிராஜ் (வயது 19). இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சமயநல்லூர் அருகே டபேதார் சந்தை முன்பாக சாலையை கடக்க முயன்ற சென்னை வடபழனியை சேர்ந்த சுந்தர்ராஜன் (59) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். சிபிராஜ் படுகாயம் அடைந்தார்.

அதேசமயத்தில் கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி (40) என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதிய உடன் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் மளமள என எரிந்ததால் மோட்டார் சைக்கிள், லாரி முழுவதும் எரிந்து நாசமானது.

விசாரணை

தகவல் அறிந்த தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் பாண்டி தலைமையில் வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அடுத்தடுத்து நடந்த விபத்து சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்