3 போலீசார் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பரமக்குடியில் விசாரணை கைதி இறந்த சம்பவம் தொடர்பாக கைதான 3 போலீசார் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் கோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2023-09-12 18:45 GMT

பரமக்குடியில் விசாரணை கைதி இறந்த சம்பவம் தொடர்பாக கைதான 3 போலீசார் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் கோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டது.

கைதி சாவு

மதுரையை சேர்ந்தவர் ராமானுஜன் மகன் வெங்கடேசன் (வயது 26). திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பரமக்குடி எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி (65) உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் கைதான ஓய்வு பெற்ற முனியசாமி ஜாமீனில் வெளிவந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏட்டுகள் பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல் மற்றும் ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணை ஒத்தி வைப்பு

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கின் ஆதாரங்களை திரட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து பரமக்குடி போலீஸ் நிலைய கைதி மர்ம மரணம் தொடர்பான வழக்கு நீதித்துறை நடுவர் கோர்ட்டில் இருந்து மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி குமரகுரு வருகிற 6-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்