அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.வுக்கு தேவையில்லை- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.விற்கு தேவையில்லை என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

Update: 2024-05-25 09:11 GMT

மதுரை,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அன்னதானத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்சனைக்கும், விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப்பெரியாறு ஆகும். தி.மு.க. அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது.முல்லைப் பெரியாறில் உரிமையை நிலைநாட்ட கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் முதல்-அமைச்சர். ஜெயலலிதா இந்துத்துவா கொள்கையை கடைப்பிடித்தார். அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அ.தி.மு.க. இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற அம்மாவின் வார்த்தைக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி தீவிர களப்பணியாற்றி வருகிறார்.சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை. அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.விற்கு தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்