மேலும் 638 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 638 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு தி்ட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2023-07-04 18:45 GMT

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு பாத்திரங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. மகளிர் திட்ட இயக்குனர் சுந்தரராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

பாத்திரங்கள் கொள்முதல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அறிவித்து தொடங்கி வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை தாலுகாவில் 8 ஊராட்சிகளில் உள்ள 15 அரசு தொடக்கப்பள்ளிகளில் கடந்த 16.09.2022 அன்று முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் 8 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சிகளுக்குட்பட்ட 638 அரசு தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆர்வமுடனும், ஆரோக்கியத்துடனும் கல்வி கற்கும் சூழல் உருவாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பள்ளிகளில் காலை உணவு சமைத்து வழங்குவதற்கான பணிகளில் ஈடுபடவுள்ள சுய உதவிக்குழுக்களுக்கு தரமான பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.இதில் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்