கட்டிட தொழிலாளி கொடூர கொலை

சின்னாளப்பட்டி அருகே அடிக்கடி தகராறு செய்ததால் கட்டிட தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த அவரது 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-14 16:59 GMT

கட்டிட தொழிலாளி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஜான்பாண்டியன் (23), தினேஷ்பாண்டியன் (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் ஜான்பாண்டியன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் வேலை செய்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவர், தனது மனைவியுடன் கலிக்கம்பட்டிக்கு வந்து, தர்மராஜ் வீட்டிலேயே கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். ஜான்பாண்டியனுக்கு ஒரு குழந்தை உள்ளது.

கழுத்தை அறுத்து கொலை

இந்தநிலையில் நேற்று அதிகாலை திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், செட்டியப்பட்டி பிரிவு அருகே வசந்தம் நகர் பகுதியில் தர்மராஜ் முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், கழுத்து அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் மீது மொபட் கிடந்தது. அப்போது அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள், இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் டிம்பி வரவழைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த நாய், கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து திண்டுக்கல்-மதுரை சாலையை நோக்கி ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

2 மகன்கள் கைது

பின்னர் இந்த கொலை குறித்து தர்மராஜனின் அண்ணன் ஆண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தர்மராஜை அவரது இரண்டு மகன்களே கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜான்பாண்டியன், தினேஷ்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தர்மராஜ் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மகன்கள் தட்டிக்கேட்டனர். ஆனால் மகன்களிடமும் தர்மராஜ் தகராறு செய்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜான்பாண்டியனும், தினேஷ்பாண்டியனும் சேர்ந்து தந்தை என்று பாராமல் தர்மராஜின் தலையில் கல்லைப்போட்டும், பிளேடால் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

தந்தையை மகன்களே கொலை செய்த சம்பவம் சின்னாளப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்