நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்மசாவு வழக்கு: 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை

ஜெயக்குமார் தனசிங் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்ட 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-05-26 21:52 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வந்த இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து கரைசுத்துபுதூருக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், அங்கு ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அவருடைய உறவினர்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரித்தனர்.

நேற்று முன்தினம் ஜெயக்குமார் தனசிங்கின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் மற்றும் மகள் கேத்தரின் ஆகியோரை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான போலீசார், கரைசுத்துபுதூருக்கு சென்று ஜெயக்குமார் தனசிங்கின் குடும்பத்தினரிடம் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு பெற்றனர். தொடர்ந்து ஜெயக்குமார் தனசிங்கின் உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரித்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் மற்றொரு பிரிவினர், ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் மீண்டும் ஆய்வு செய்தனர்.

அவர் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த 32 பேருக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் சம்மன் அனுப்பப்பட உள்ளது. அவர்களில் தினசரி 2 பேரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்