பல்லடம்: வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர்கள்

பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கூட்டு பாலியல் தொந்தரவு செய்த 3 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-28 04:54 GMT

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எம். ஊத்துக்குளி பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,நேற்று முன்தினம் இரவு கணவர் மட்டும் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது மனைவி தனியே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில வாலிபர்கள் 3 பேர் வீட்டிற்குள் புகுந்து தனியே இருந்த அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி சத்தம் போட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தொழிற்சாலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வடமாநிலத்தை சேர்ந்த இப்ராஹிம் அலி (வயது 27), அமருள் இஸ்லாம் (22), அனீப் அலி (19) ஆகிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்