தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-10 17:52 GMT

போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்கள்

பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் வாகன நிறுத்தும் இடம் வசதி இல்லாததால், அதன் வாடிக்கையாளர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். ஏற்கனவே அந்த சாலை போக்குவரத்து நிறைந்து காணப்படும் சூழ்நிலையில், தற்போது நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

நள்ளிரவு நேரத்தில் பெரம்பலூருக்கு அரசு பஸ்கள் வர நடவடிக்கை தேவை

திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பெரம்பலூர் வழியாக வெளியூர்களுக்கு நள்ளிரவில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெரம்பலூர் பயணிகள் ஏற்றப்படுவதில்லை. தொலை தூர பயணிக்கும் பயணிகளை மட்டு்ம் பஸ்களில் டிரைவர், கண்டக்டர் ஏற்றுகின்றனர். இதனால் பெரம்பலூர் பயணிகள் நள்ளிரவு நேரத்தில் பஸ் நிலையங்களில் அதிகாலை வரை காத்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து த்துறை அமைச்சர் சிவசங்கர் தொகுதியான குன்னம் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்துக்கு இந்த கதி என்று பயணிகள் புலம்புகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நள்ளிரவு நேரத்தில் பெரம்பலூருக்கு செல்லும் பயணிகளை பஸ்களில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

கால்நடைகளால் தொல்லை

பெரம்பலூர் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய், மாடு, குதிரைகள் ஏராளமானவை சுற்றித்திரிகிறது. இந்த கால்நடைகளால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உப்புஓடை அருகே கிரீன்சிட்டி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. திருடர்கள் இரவு நேரங்களில் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிட கட்டுமானப்பொருட்களை அடிக்கடி திருடி சென்று விடுகின்றனர். இந்த திருட்டுக்களை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

சுகாதார வளாகம் தேவை

பெரம்பலூர் தாலுகா அலுவலகம் அருகே ஆத்தூர் சாலையில் புதிதாக நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆத்தூர், வீரகனூர், கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், பூலாம்பாடி, நெற்குணம், கைகளத்தூர், வெண்பாவூர், நெய்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் அலுவல் வேலை, கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக அதிக எண்ணிக்கையில் பஸ்களில் வந்து ஆத்தூர் சாலையில் உள்ள புதிய நிழற்குடை பகுதியில் இறங்கி செல்கின்றனர். மேலும் சிலர் பஸ்சுக்காக இந்த நிழற்குடையில் காத்தும் கிடக்கின்றனர். இந்தநிலையில் பயணிகள் அவசரத்திற்கு இயற்கை உபாதையை கழிக்க இப்பகுதியில் சுகாதார வளாகம் ஏதுமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை பகுதியில் சுகாதார வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர். 

Tags:    

மேலும் செய்திகள்