ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-12 21:15 GMT

ஈரோடு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டுமனை பட்டா

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இங்கு சித்தோடு அருகே உள்ள கனிமாகாடு தந்தை பெரியார் நகரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம். நாங்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தர்ணா

இதற்கிடையில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஒரே இடத்திற்கு 3 பேருக்கு பட்டா வழங்கி உள்ளார். மேலும் அவர் பயனாளிகள் தேர்வு செய்வதில் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கே மீண்டும் பட்டா வழங்கியுள்ளார். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள், 'கலெக்டரிடம் நேரில் சென்று மனு கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். ஒரு மணி நேரம் தொடர்ந்த தர்ணாவுக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து எழுந்து சென்று தங்களது கோரிக்கை மனுவை கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்