நீலகிரியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீலகிரியில் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
பவானிசாகர்
நீலகிரியில் மழை இல்லாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தில் முக்கிய குடிநீர் ஆதாரமாகும், விவசாயத்தின் உயிர் நாடியாகவும் இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீர்வரத்து குறைந்தது
இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,378 கன அடியாக இருந்தது.
நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 869 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 104.03 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.