கோவையில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

சீட் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை கோவையில் போலீசார் கைதுசெய்தனர்

Update: 2022-09-22 18:45 GMT


சீட் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை கோவையில் போலீசார் கைதுசெய்தனர்.

சீட் கேட்டு மிரட்டல்

திருப்பூர் ராமகிருஷ்ணாநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் முகமது அல் அமீன் (வயது 53). இவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவையில் உள்ள ஜி.ஆர்.டி. கல்லூரியை தொடர்புகொண்டு உள்ளார். அப்போது அவர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், சென்னையில் பணியாற்றுவதாகவும் கூறி அறிமுகம் செய்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் கல்லூரியில் தனக்கு தெரிந்தவர்களை சேர்க்க சீட் தர வேண்டும். இல்லை என்றால் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையி லான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், முகமது அல் அமீன் ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பதும், போலியாக தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி சீட் கேட்டதும் தெரியவந்தது.

மேலும் இவர் மீது சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்திலும், சென்னை மாநகர குற்றப்பிரிவிலும், சேலம் சூரமங்கலத்திலும் இதுபோன்று மோசடி செய்ததாக வழக்கு உள்ளதும், சென்னையில் தன்னை நீதிபதி என்று கூறி மிரட்டிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்ததும் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் பதுங்கி இருந்த அவரை சைபர் கிரைம் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்