விவசாயிகள் மண்ணின் சத்துக்களின் அளவை இணையதளம் மூலம் அறியலாம்

விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவினை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட தமிழ் மண் வளம் எனும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update:2023-08-30 00:15 IST

விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவினை தமிழக அரசால் உருவாக்கப்பட்ட தமிழ் மண் வளம் எனும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மண் வளம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ் மண் வளம் என்பது புல எண் வாரியாக மண்ணின் ஊட்டச்சத்து நிலையினை அறிந்து அதற்கேற்ற உரம் பரிந்துரை மற்றும் மண்ணிற்கேற்ற வேளாண், தோட்டக்கலை மற்றும் மரப்பயிர்கள் பரிந்துரை வழங்குவதற்கென உருவாக்கப்பட்ட இணைய முகப்பு ஆகும். தமிழ் மண் வளம் இணைய முகப்பு அனைத்து மாவட்டங்களிலும் 2015-16-ம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மண்பரிசோதனை ஆய்வு முடிவுகளின் தரவுகளை தொகுத்து புல எண் வாரியாக விவசாயிகளின் பெயருடன் மண்வள அட்டை தாங்களாகவே பெறும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

விவசாயிகள் கணினி மூலமாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவோ http://tnagriculture.in/mannvalam/ எனும் இணையதள முகவரியில் தமிழ்மண்வளம் இணையதளத்தை அணுகலாம். இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால் உடனடியாக மண்வளம் குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு விவசாயிகளின் கைப்பேசியில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.

இணையதளம் மூலம் அறியலாம்

இந்த இணைய முகப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல வாரியாகவும், மாவட்டத்தில் உள்ள வட்டாரம் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டுள்ளன. மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை, களர் அமில நிலை, அங்கக கரிமம், சுண்ணாம்புத்தன்மை போன்ற வேதியியல் குணங்கள் பற்றிய விவரங்களும், தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்ட சத்துக்களின் விவரங்களும், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களின் விவரங்களும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் சார்ந்த எவ்வகை பயிர்கள் சாகுபடி செய்யலாம் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தேர்ந்தெடுக்கும் பயிருக்கு எவ்வளவு உரமிட வேண்டும் போன்ற பரிந்துரைகளும் தெரிந்துகொள்ளலாம். ஆதலால், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தமிழ் மண்வளம் இணையதளத்தை பயன்படுத்தி தங்களின் நிலம் மற்றும் மண்ணின் நிலை அறிந்து பயிரிட்டு தேவையான அளவு உரங்களை மட்டும் பயன்படுத்தி குறைவான செலவில் கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்