‘போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தி.மு.க. படுதோல்வி’ - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்ற தொழிலாளி சென்னையில் இருந்து திருத்தணிக்கு மின்சார தொடர்வண்டியில் பயணம் செய்திருக்கிறார். திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தில் அந்த தொடர்வண்டியில் ஏறிய 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் தங்களிடமிருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டுவது போல மிரட்டியுள்ளனர். அதை அவர்களில் ஒருவன் காணொலியில் பதிவு செய்திருக்கிறான். இதனால் அச்சமடைந்த சுராஜ், அவர்களை தடுத்து விட்டு, திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியுள்ளார்.
ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்ற சிறுவர்கள் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி அதை காணொலியாக பதிவு செய்து இணையத்தில் பரவ விட்டுள்ளனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை அங்குள்ள மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்த செய்தியை கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது; உடல் நடுங்குகிறது.
பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பொதுமக்கள் முன்னிலையில் தொடர்வண்டியிலும், தொடர்வண்டி நிலையத்திலும் ஒருவரை அரிவாளால் வெட்டி படம் பிடித்து வெளியிடத் துணிகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கமும், அதனால் ஏற்படும் தாக்கமும் எந்த அளவுக்கு பெருகியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த சீரழிவுக்கு முழுக்க முழுக்க தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது. இது தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து 28.07.2022-ஆம் நாள் போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி எனது தலைமையில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை.
தமிழ்நாட்டிற்கு ஆந்திராவிலிருந்துதான் அதிக அளவில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது என்பதால் எல்லையோர மாவட்டங்களில் அதன் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது திருத்தணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினேன்.
கடந்த வாரம் திருத்தணியில் நடைபெற்ற மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணியும் இதே கருத்தை வலியுறுத்தினார். அடுத்த வாரத்திலேயே அதே திருத்தணியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் அட்டகாசம் செய்திருப்பதிலிருந்தே இந்த விஷயத்தில் தி.மு.க. அரசு எந்த அளவுக்கு செயலற்று கிடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட தி.மு.க. அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது. அதனால் பொதுவெளிகளில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.