செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை

செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-31 09:12 GMT

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 23). இவரும், காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (24) என்பவரும் காதலித்து வந்தனர். ரஞ்சித்குமார் கூட்டுறவு கடன் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

திருமணத்துக்கு முன்னரே கவுசல்யா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து கடந்த 5 மாதத்துக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கவுசல்யாவுக்கு 2 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

கணவர் ஊரான காஞ்சீபுரத்தில் வசித்து வந்த கவுசல்யாவை அடிக்கடி சந்தேகப்பட்டு ரஞ்சித் அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையுடன் கவுசல்யாவை அவரது பெற்றோர் செம்மஞ்சேரிக்கு அழைத்து சென்றனர்.

நேற்று காலை ரஞ்சித்குமார் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் உள்ள மனைவி வீட்டுக்கு சென்று தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைத்தார். அவர் மறுக்கவே கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், கவுசல்யாவை பலமாக தாக்கினார். இதில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆத்திரம் தலைக்கு ஏறிய நிலையில் ரஞ்சித்குமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 மாத குழந்தையின் காலை பிடித்து சுவரில் அடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். கவுசல்யா அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று தனது 2 மாத குழந்தை உயிரிழந்தது கூட தெரியாமல் உறவினர் வீட்டில் உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்