வனத்துறையினர் திடீர் துப்பாக்கிச்சூடு: பலியான முதியவர்...தேனியில் அதிர்ச்சி சம்பவம்

தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-10-29 04:31 GMT

தேனி,

தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஈஸ்வரன் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் குள்ளப்பா கவுண்டன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் உயிரிழந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்த நிலையில் வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது ஈஸ்வரன் பதிலுக்கு தாக்கியதாக வனத்துறை சார்பில் கூறப்படுகிறது. கத்தியால் தாக்கவந்த ஈஸ்வரனை பாதுகாப்பு கருதி வனவர் திருமுகன் துப்பாக்கியால் சுட்டதில் பலியானதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரன் உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவில் வயலில் காவலுக்கு சென்ற ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாக உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்