இளம்பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.4.89 லட்சம் மோசடி

நாமக்கல்லில் ஆன்லைனில் அழகுசாதன பொருட்கள் வாங்கி வந்த இளம்பெண்ணிடம் ரூ.4 லட்சத்து 89 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-03-09 00:06 IST

அழகுசாதன பொருட்கள்

நாமக்கல் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் மோகனமுகில் (வயது25). பேஷன் டெக்னாலஜி முடித்து உள்ள, இவர் குறிப்பிட்ட ஒரு ஆப்பை பயன்படுத்தி ஆன்லைனில் அழகுசாதன பொருட்களை கடந்த 5 ஆண்டுகளாக வாங்கி வந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகளாக பொருட்கள் வாங்கி வருவதால், பரிசு பெற தேர்வாகி இருப்பதாக வாட்ஸ்-அப்பில் அவருக்கு குறுஞ்செய்தி வந்து உள்ளது.

பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கஸ்டமர் கேர் பிரிவில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர், 5 பரிசு பொருட்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என கூறி உள்ளார். அதற்கு மோகனமுகில் டி.வி.யை தேர்வு செய்து உள்ளார். அப்போது உங்கள் வாட்ஸ்-அப் நம்பருக்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும் அதை சொல்லுங்கள் என கூறி உள்ளார்.

ரூ.4.89 லட்சம் மோசடி

இந்த நம்பரை சொன்ன சிறிது நேரத்தில் மோகனமுகில் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர் ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்தை அபேஸ் செய்து விட்டார். இந்த ஆன்லைன் மோசடி குறித்து மோகனமுகில் நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எக்காரணம் கொண்டும் அடையாளம் தெரியாத நபர்கள் ஓ.டி.பி. எண்ணை கேட்டால் பகிர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்