இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-19 02:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 42). இவரது மனைவி நாகராணி (வயது 33) இருவருக்கும் திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராணி அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற செவ்வாப்பேட்டை போலீசார் உயிரிழந்த நாகராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகராணி தாயார் மேனகி (65) கொடுத்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது. திருமணமான இரண்டரை ஆண்டுகளில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே நாகராணி திருமணத்தின் போது சீர்வரிசையாக குறைவான நகை போட்டதாக கூறியும், கூடுதலாக வரதட்சணையாக நகை, பணம் கேட்டும், குழந்தை இல்லை என்று கூறி கொடுமைப்படுத்தியதாகவும், பக்கத்து தெருவில் வசிக்கும் பெற்றோர் வீடு மற்றும் உறவினர்களிடம் பேசக்கூடாது யாரும் உன்னை பார்க்க இங்கு வரக்கூடாது என கொடுமைப்படுத்தியதால் தான் மனம் உடைந்து நாகராணி தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாகராணி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் டவுன் போலீசார் நாகராணி உறவினர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்