தர்மபுரி: பணிக்கு சென்ற அரசு ஊழியர் பைக் மோதி பலி

தர்மபுரி அருகே பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்துசென்ற அரசு ஊழியர் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

Update: 2022-07-18 05:56 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், சின்ன முரட்டு பட்டியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் வினோத் (வயது 26). இவர் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார். தர்மபுரியில் இருந்து பஸ்சில் நாட்றம்பள்ளிக்கு வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.

இன்று காலை வழக்கம் போல் நாட்றம்பள்ளி வந்த வினோத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது நாட்றம்பள்ளியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பச்சூர் பகுதியை சேர்ந்த அசோகன் மனைவி சுமதி பைக் ஒட்டி வந்தார்.

அவர் ஓட்டி வந்த பைக் திடீரென நிலை தடுமாறி வினோத் மீது மோதியது. இதில் வினோத் மேம்பாலத்தில் இருந்த தடுப்பில் மோதி தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுமதி படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் சுமதியை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விபத்தில் உயிரிழந்த வினோத்குமார் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்றம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்