விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

திண்டிவனத்தில் விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Update: 2022-11-23 18:45 GMT

திண்டிவனம்

பண்ருட்டி தாலுகா எல்.என்.புரம், மணி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(வயது39). சென்னை அரசு போக்குவரத்துகழக பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 4-9-2015 அன்று பண்ருட்டியில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகில் வந்தபோது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஸ்ரீதரன் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் சார்பு நீதிமன்றம் 2-ல் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்தில் பலியான ஸ்ரீதரன் குடும்பத்துக்கு ரூ.22 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டார். ஆனால் இது நாள் வரை இழப்பீட்டு தொகையை வழங்காததால் கடந்த 2021-ம் ஆண்டு கூடுதல் சார்பு நீதிமன்றம் -1 ல் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுமான் வட்டியுடன் சேர்த்து ரூ.31 லட்சத்து 34 ஆயிரத்து 741 இழப்பீட்டு தொகையை ஸ்ரீதரன் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும், வழங்க தவறினால் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கு கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். ஆனால் இழப்பீ்ட்டு தொகையை வழங்காததால் கோர்ட்டு முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் துரை சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து திண்டிவனம் கோர்ட்டில் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்