'தூய்மை நகருக்கான பட்டியலில் திண்டுக்கல்லை இடம்பெற செய்வேன்'

‘தூய்மை நகருக்கான பட்டியலில் திண்டுக்கல்லை இடம்பெற செய்வேன்’ என்று புதிய ஆணையராக பதவி ஏற்ற ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2023-09-28 01:45 GMT

பணியிட மாற்றம்

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருந்தவர் மகேஸ்வரி. இவர், தஞ்சை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கரூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன்படி நேற்று திண்டுக்கல் வந்த ரவிச்சந்திரன், காலை 9 மணி அளவில் திண்டுக்கல் மாநகராட்சியின் 6-வது ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இவர் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தூய்மை நகருக்கான விருது பட்டியலில் திருச்சி மாநகராட்சியை இந்திய அளவில் 2-ம் இடத்தை பிடிக்க வைத்தவர் ஆவார்.

மேலும் பொறியியல் பிரிவு, நகர தூய்மை பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். இதுமட்டுமின்றி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் வல்லுனர் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூய்மை நகர் பட்டியல்

திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக பதவி ஏற்றது குறித்து ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். விரைவில் தூய்மை நகருக்கான பட்டியலில் திண்டுக்கல்லை இடம்பெற செய்வேன். மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள், பொதுமக்களிடம் கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்