காதல் திருமண விவகாரம்- இளைஞரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்ணின் உறவினர்கள் கைது

காதல் திருமண விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள், இளைஞரின் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-01-23 12:02 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பார்த்தசாரதி. இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ராவும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 18-ம் தேதி வீராபுரம் கன்னியம்மன் நகர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், சுசித்ரா காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பெண்ணின் பெற்றோர், பார்த்தசாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பார்த்தசாரதியின் தந்தையான அண்ணாதுரையை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் வீடியோ காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடந்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, இளைஞரின் வீடு புகுந்து அவரின் பெற்றோரை தாக்கிய விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்