குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்

கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

Update: 2024-05-25 22:27 GMT

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக தொடங்கப்படவில்லை. பின்னர் 10.30 மணியளவில் கடலில் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து 2½ மணி நேரம் தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து 3-வது நாளாக கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்