மீனாட்சி அம்மன் கோவில் பட்டாபிஷேகம்; கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக் கூடாதா? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி

மனைவியை இழந்தவர் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Update: 2024-04-16 16:09 GMT

மதுரை,

மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நிகழ்வும் ஆகம விதிகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. இந்த விழாவின் 8-ம் நாளில் பட்டாபிஷேக நிகழ்ச்சியின்போது மீனாட்சி அம்மன் கைகளில் இருந்து ஒப்புவிக்கப்படும் செங்கோலை அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக்கொள்வார்.

ஆகம விதிகளின்படி திருமணம் ஆகாதவரோ, கணவர் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக்கொள்ள இயலாது. தற்போது மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மனைவி ருக்மணி பழனிவேல் ராஜன் உள்ளார். அவர் கணவரை இழந்தவர் என்பதால், ஆகம விதிகளின்படி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு தகுதியான நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது போன்ற மனுவை ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்துள்ளதாகவும், இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்.

அப்போது நீதிபதி, திருமணம் ஆகாதவரோ, கணவர் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார். மேலும், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இந்துக்கள் மட்டும்தான் செல்கிறார்கள், செங்கோலை வாங்குபவரும் ஒரு இந்துதான். இந்நிலையில் விழாவின் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது ஏன்? இந்த காலத்திலும் இது போன்ற கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கது அல்ல" என்று குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்