மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்; நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து

ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.

Update: 2024-04-18 14:38 GMT

மதுரை,

மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நிகழ்வும் ஆகம விதிகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. இந்த விழாவின் 8-ம் நாளில் பட்டாபிஷேக நிகழ்ச்சியின்போது மீனாட்சி அம்மன் கைகளில் இருந்து ஒப்புவிக்கப்படும் செங்கோலை அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக்கொள்வார்.

ஆகம விதிகளின்படி திருமணம் ஆகாதவரோ, கணவர் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக்கொள்ள இயலாது. தற்போது மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மனைவி ருக்மணி பழனிவேல் ராஜன் உள்ளார். அவர் கணவரை இழந்தவர் என்பதால், ஆகம விதிகளின்படி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு தகுதியான நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாரர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சுரேஷ்குமார், நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "கோவில் நிகழ்வுகளில் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்" என வாதிடப்பட்டது. அதே சமயம், "தனி நீதிபதியின் உத்தரவு தெளிவாக உள்ளது. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை" என அரசு தரப்பு வாதிட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "அக்காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியாது. நூல்களின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது. ஆகம விதிகள் என்ன? ஏதேனும் குறிப்புகள் உள்ளதா? எதை பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து ஒரே நாளில் நீதிமன்றம் முடிவுக்கு வர இயலாது.

ஆகம விதிகள் விவகாரத்தில் ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல. ஆகம விதிகள் குறித்து முறையான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள். அதனை ஆய்வு செய்து அடுத்த வருடம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்