மிக்ஜம் புயல் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி வருகிறார்கள்.

Update: 2023-12-05 22:45 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி வருகிறார்கள்.

அதன்படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் படகுகள் மூலமாக சென்று விஜய் மக்கள் இயக்கத்தினர் உணவுகளையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகையில், ''விஜய் உத்தரவின்பேரில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை தவிர, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்'', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்