கிருஷ்ணகிரியில் 360 பயனாளிகளுக்கு ரூ.1.53 கோடியில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் காந்தி வழங்கினார்

Update: 2023-01-14 18:45 GMT

கிருஷ்ணகிரியில் நடந்த புகைப்பட கண்காட்சியில் 360 பயனாளிகளுக்கு ரூ.1.53 ேகாடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் செய்திமக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா நடந்தது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து 360 பயனாளிகளுக்கு ரூ.1.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பாராட்டு சான்றிதழ்கள்

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு, அறிவுதிறனை வளர்த்துக்கொள்ளும் விதமாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் கலை திருவிழாவில் மாநில அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், நகராட்சி தலைவர் பரிதா நவாப், முன்னாள் எம்.பி. சுகவனம், வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்