வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு

வள்ளியூர் ரெயில் நிலையம் முன்பு வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு மர்மநபர்கள் தீவைத்து சென்றனர்.

Update: 2023-06-20 19:18 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் ரெயில் நிலையம் முன்பு வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு மர்மநபர்கள் தீவைத்து சென்றனர்.

வாகன காப்பகம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ெரயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் நின்று செல்லும். இதனால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

ரெயில் நிலையம் முன்பு வாகன காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் தினமும் 25 முதல் 30 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைப்பு

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வாகன காப்பகத்திற்குள் மர்மநபர்கள் புகுந்தனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இதில் 6 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தீ வைத்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்