திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி 24-ந்தேதி நடக்கிறது

Update: 2023-10-16 01:14 GMT

திருப்பரங்குன்றம், 

நவராத்திரி திருவிழா

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நவராத்திரி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று கோவிலில் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல இன்று(திங்கட்கிழமை) நக்கீரருக்கு காட்சி கொடுத்தல் அலங்காரமும், நாளை (செவ்வாய்க்கிழமை) ஊஞ்சல் அலங்காரமும். 18-ந்தேதி பட்டாபிஷேக அலங்காரமும், 19-ந்தேதி திருக்கல்யாணம் அலங்காரமும், 20-ந்தேதி தபசு காட்சியும், 21-ந்தேதி மகிஷாசுரவர்த்தினி அலங்காரமும், 22-ந்தேதி சிவபூஜையும், 23-ந்தேதி சரஸ்வதி பூஜை அலங்காரமும் நடக்கிறது.

கொலுவாக வாகனங்கள்

திருவிழாக்களில் சுவாமி எழுந்தருளக்கூடிய வாகனங்கள் கொலுவாக வீற்றிருப்பது நவராத்திரியின் தனி சிறப்பாகும். நவராத்திரியையொட்டி கோவிலுக்குள் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் கோவிலில் அதிக எடை கொண்ட வெள்ளியிலானயானை வாகனம், வெள்ளி பூத வாகனம், தங்கமயில் வாகனம், தங்க பல்லக்கு, தங்க குதிரை வாகனம், பச்சைக் குதிரை வாகனம், தங்கசப்பரம் உள்ளிட்ட பல்வேறுவாகனங்கள்கொலுவாக வீற்றிருந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 24 -ந்தேதி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் இருந்து பசுமலை அம்புபோடும் மண்டபத்திற்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நடக்கிறது. அங்கு தங்க குதிரையில் முருக பெருமான் எழுந்தளிய 4 திசையில் எட்டுதிக்குமாகவில், அம்பு எய்தல் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்