இந்து அல்லாதவர்களை பழனி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மாற்று மதத்தினர் சாமி தரிசனம் செய்ய அவர்களுக்கென்று தனியே பதிவேடு ஒன்றை உருவாக்கலாம்.

Update: 2024-01-30 06:39 GMT

மதுரை, 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் பழனி முருகன் கோவிலுக்குள் மாற்று மதத்தினர் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இது கடும் சர்ச்சைக்குள்ளானதால் உடனடியாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்து அல்லாதவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் வர அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பில், இந்து அல்லாதவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோவிலில் உள்ள கொடி மரத்தை தாண்டி வரக்கூடாது. மேலும் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் வரக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை மீண்டும்  வைக்கலாம்.

மேலும் மாற்று மதத்தினர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், அதற்காக தனியே பதிவேடு ஒன்றை உருவாக்க வேண்டும். பதிவேட்டில், இந்த சாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என்று எழுதி வாங்கிய பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்