அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நர்சு கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நர்சை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-10 21:00 GMT

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நர்சை போலீசார் கைது செய்தனர்.

வேலை வாங்கி தருவதாக...

திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவர் தனது மகனை அரசு வேலையில் சேர்ப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில் முத்தழகுபட்டியை சேர்ந்த சாந்திமேரி (வயது 56) என்பவரது அறிமுகம் கிடைத்தது. இவர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

மேலும் சாந்திமேரி தனக்கு அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அதன்மூலம் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியதாக தெரிகிறது. அதை உண்மை என நம்பிய ஆரோக்கியதாஸ், தனது மகனுக்கு வேலை வாங்கி தரும்படி ரூ.2 லட்சத்தை சாந்திமேரியிடம் கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து ஆரோக்கியதாஸ் பணத்தை திரும்ப கேட்ட போது, சாந்திமேரி கொடுக்கவில்லை.

நர்சு கைது

இதனால் ஏமாற்றம் அடைந்த ஆரோக்கியதாஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சாந்திமேரி ஆரோக்கியதாசிடம் மட்டுமின்றி மேலும் 4 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்திமேரியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்