'கொடநாடு வழக்கில் உண்மை வெளிவர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்' - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Update: 2023-07-14 13:39 GMT

மதுரை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரைக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் காத்திருந்த அவரது ஆதரவாளவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் விமானத்தில் வந்திறங்கிய ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். அவர் வாழ்ந்த இடமாகிய கொடநாட்டில், யாருமே சிந்தித்து பார்க்காத அளவிற்கு கொலையும், கொள்ளையும் நடந்துள்ளது.

அதற்கு உரிய விசாரணை செய்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. முன்னாள் முதல்-அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளார்கள். உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்