அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு: கைப்பற்றப்பட்ட 214 ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு: கைப்பற்றப்பட்ட 214 ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு;

Update:2022-08-13 23:00 IST

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். இவர் தற்போது நாமக்கல் நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 72 லட்சம் சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் என 26 இடங்களில் நாமக்கல், திருச்சி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வழக்கிற்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900-ம் மற்றும் 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 214 ஆவணங்களும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு, பகலாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய வங்கி லாக்கரை திறந்து சோதனையிடவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்