கர்நாடக அரசு மருத்துவக்கல்லூரியில் `சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.12½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கர்நாடக அரசு மருத்துவக்கல்லூரியில் `சீட்' வாங்கி தருவதாக கூறி ரிக் வண்டி மேலாளரிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிக் வண்டி மேலாளர்
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட தேவஸ்தான புதூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48). ரிக் வண்டி மேலாளர். இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு கர்நாடக அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக குறுந்தகவல் வந்தது.
இதை உண்மை என நம்பி சம்பந்தப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டு முத்துசாமி தனது மகளுக்கு 'சீட்' வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு எதிர்முனையில் பேசிய நபர், சில ஆவணங்களை வாங்கி கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளார். சில நாட்கள் கழித்து உங்கள் மகள் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார். எனவே முன்பணமாக ரூ.6½ லட்சம் செலுத்துங்கள் என கூறி உள்ளார்.
ரூ.12½ லட்சம் மோசடி
மேலும் சில நாட்கள் கழித்து 'சீட்' கிடைத்து விட்டது எனவே மேலும் ரூ.6 லட்சம் கட்ட சொல்லி உள்ளார். அவரது பேச்சை நம்பி முத்துசாமி ரூ.12½ லட்சம் கட்டி உள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அத்துடன் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துசாமி இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.