சேகரிக்கப்பட்ட குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விற்பனை - மாநகராட்சிக்கு ரூ.64 லட்சம் வருவாய்

சேகரிக்கப்பட்ட குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு மாநகராட்சிக்கு ரூ.64 லட்சம் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

Update: 2022-06-18 01:38 GMT

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் கழிவுகள் மாநகராட்சியின் நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உலர்க்கழிவுகள் வள மீட்பு மையங்களுக்கும் (ஆர்.ஆர்.சி), பொருட்கள் மீட்பு மையங்களுக்கும் (எம்.ஆர்.எப்) கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.

அந்தவகையில் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இந்த மாதம் 10-ந்தேதி வரை 14 ஆயிரத்து 361 கிலோ இயற்கை உரங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 490 வருவாயும், அதேபோல் 5 லட்சத்து 85 ஆயிரத்து 912 கிலோ உலர்க்கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.62 லட்சத்து 78 ஆயிரத்து 24 வருவாயும் என மொத்தமாக ரூ.64 லட்சத்து 11 ஆயிரத்து 514 வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்