பூந்தமல்லி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்பு - ஓட்டல், திருமண மண்டபத்துக்கு 'சீல்'

பூந்தமல்லி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஓட்டல், திருமண மண்டபத்துக்கு வருவாய் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2023-10-22 10:21 GMT

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் சித்தி, புத்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலம் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.

இந்த நிலத்தை சிலர், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து ஓட்டல் மற்றும் திருமண மண்டபம் என கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத் துறையினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அறநிலையத்துறை மாவட்ட உதவி கமிஷனர் ஜெயா தலைமையில் கோவில் செயல் அலுவலர் மாதவன், பூந்தமல்லி தாசில்தார் மாலினி மேற்பார்வையில் வந்த கோவில் ஊழியர்கள், வருவாய்த்துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த கட்டிடங்களில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, அனுமதி இன்றி கட்டிய திருமண மண்டபம், ஓட்டல் ஆகியவற்றின் நுழைவாயிலை பூட்டி 'சீல்' வைத்தனர்.

தற்போது கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.01 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், இதை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்