எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்- சிறப்பு அதிகாரி அறிவிப்பு

20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவு படிந்துள்ளது.

Update: 2023-12-17 07:58 GMT

சென்னை, 

புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கழிவு மழைநீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகத் தாழ்வான பகுதிகளில் படிந்துள்ளது. இந்த கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரில் கலந்து, எண்ணூர் கடலிலும் கலந்ததால் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவு படிந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடலோர காவல் படையினர் எண்ணெய் கழிவுகளை அழிப்பதற்காக ரசாயன பொடிகளை கடலில் தூவி உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 22 மீனவ கிராமங்களில் உள்ள 2,300 மீனவ குடும்பங்கள் மற்றும் 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12,500, மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு தலா ரூ.10,000 ஆயிரம் வழங்கப்படும் என்று சிறப்பு அதிகாரியான கந்தசாமி ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.

இதனால் எண்ணெய் கழிவை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தாழங்குப்பம் பகுதி மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்