சாலையோரம் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை

சாலையோரம் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையால் வாகனஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.

Update: 2023-06-30 17:55 GMT

திருப்பூர்-பல்லடம் சாலை பல்லடம், சூலூர், கோவை மற்றும் கேரள மாநிலத்திற்கும் செல்வதற்கு முக்கிய சாலையாகும். இந்த சாலையில் வீரபாண்டி பிரிவில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்த பலகையில் திருப்பூர், பெருமாநல்லூர், அவினாசி மற்றும் தாராபுரம் செல்லக்கூடிய குறியீடு உடன் வைக்கப்பட்டிருந்தது.

இதில் வலதுபுறம் சென்றால் மிக குறுகிய நேரத்தில் தாராபுரம் சாலையில் சென்றடை முடியும். தற்போது அந்த பலகையை கழற்றி சாலையோரம் வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பழைய பஸ் நிலையம் வந்து தாராபுரம் சாலை வழியாக செல்லுகின்றனர். இதனால் 15 கிலோ மீட்டர் அளவிற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் வழிகாட்டல் தகவல் பலகையை பார்த்து தெரிந்துகொண்டு முன்கூட்டியே எந்த வழியில் செல்ல வேண்டும் என்று முடிவினை எடுத்து செல்கின்றனர். தற்போது தகவல் பலகை இல்லாததால் எந்த பக்கம் செல்ல வேண்டும் என்று தெரியாமல் குழப்பமடைந்து வாகனத்தை சாலையோரம் நிறுத்தி மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு செல்லுகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது " திருப்பூர் தென்னம்பாளையம், தமிழ்நாடு தியேட்டர், வீரபாண்டி பிரிவு மற்றும் அருள்புரம் வரை சாலையின் இருபுறமும் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வீரபாண்டி பிரிவில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டல் தகவல் அறிக்கை பலகையை அகற்றி சாலையோரம் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். சாலை விரிவாக்க பணி முடிந்ததும் தகவல் பலகை வைக்கப்படும்" என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்