இன்னும் 2 ஆண்டில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் 2 ஆண்டில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

Update: 2022-07-23 18:29 GMT

சாயல்குடி, 

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் 2 ஆண்டில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

அடிப்படை வசதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். பின்னர் சாயல்குடி வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக முதுகுளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் கடந்த ஆட்சியாளர்கள் சென்று விட்டனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு மக்களின் குறைகள் உடனுக்குடன் களைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

குடிநீர் பற்றாக்குறை

அதன் அடிப்படையில் முதுகுளத்தூர் தொகுதியில் பழுதடைந்த டிரான்ஸ்பார்ம் மற்றும் மின் கம்பங்களை மாற்றி சீரான மின்வினியோகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் இல்லாத மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளுக்குள் ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக மாற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் நடைபெறுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நடைபெற்று தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறும்.

காமராஜருக்கு வெண்கல சிலை

முதுகுளத்தூர் தொகுதியில் பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுக்கு திருவுருவ வெண்கல சிலை விைரவில் அமைக்கப்படும். பேரிடர் காலங்களில் அலைகளின் வேகத்தை குறைப்பதற்காக கடலின் உள்பகுதியில் கல் நிரப்பும் பணி கன்னிராஜபுரம் ஊராட்சி ரோச்மாநகர் கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. முதுகுளத்தூர் தொகுதி முழுவதும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழையே பெய்யாவிட்டாலும் ஒரு போக விவசாயத்திற்கு வைகையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து முதுகுளத்தூர் தொகுதி கண்மாய்களில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்