அறச்சலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பெண் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
அறச்சலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பெண் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.;
அறச்சலூர்
அறச்சலூர் பேரூராட்சியின் துணைத்தலைவராக துளசி மணி உள்ளார். இவர் ம.தி.மு.க.வை சேர்ந்தவர் ஆவார். நேற்று முன்தினம் பகல் 11 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த இவர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவனிடம், நிர்வாகத்தில் நடைபெறும் கணக்கு தொடர்பான ஆவணங்கள், மினி நோட் பில் புத்தகம், தினசரி வருகை பதிவேடு போன்றவற்றை பார்க்க அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு செயல் அலுவலா் அனுமதி மறுத்து உள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தில் துணைத்தலைவர் துளசி மணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன், அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் பேரூராட்சி அலுவலகத்துக்கு விரைந்து சென்று துணைத்தலைவர் துளசிமணியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின்போது 'பேரூராட்சி செயல் அலுவலர் மினி நோட் மற்றும் பில் புத்தகம், தினசரி வருகை பதிவேடு போன்றவற்றை பார்க்க அனுமதி அளித்ததன் பேரில் தனது உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு இரவு 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அறச்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.