நீலகிரியில் கோடை விழா நிறைவு

நீலகிரியில் ஒரு மாதமாக நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி நடந்த கலைநிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

Update: 2023-05-31 20:30 GMT

ஊட்டி

நீலகிரியில் ஒரு மாதமாக நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி நடந்த கலைநிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

கோடை விழா

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடந்தது.

இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஊட்டியில் பலூன் திருவிழா, குன்னூரில் தேயிலை கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 125-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடந்தது.

கலைநிகழ்ச்சிகள்

இந்த கண்காட்சியில் 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் சிற்பம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதையொட்டி, 175-வது ஆண்டு பூங்கா, ஊட்டி-200, தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, பட்டாம்பூச்சி, செங்காந்தள் மலர் உள்பட பல்வேறு அலங்காரங்கள் இடம்பெற்று இருந்தது.

மேலும் பல வண்ண மலர்களால் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டது. மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அவர்கள் அதனை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 26, 27-ந் தேதிகளில் பழக்கண்காட்சி நடந்தது.

இந்தநிலையில் நேற்று கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊட்டி ஆர்.டி.ஓ. துரைராஜ் தலைமை தாங்கினார்.

இதில் பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் அரசுத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்