தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
அய்யலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அய்யலூர் அருகே உள்ள குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவர், தனியார் குளிர்பான நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த 2¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய சதீஷ்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.