காங்கிரஸ் அக்னிவீர் திட்டம் குறித்து பேச கூடாதா? தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்

அக்னிவீர் திட்டத்தை ஒழிப்போம் என்று பிரசாரம் செய்ய ஒரு எதிர்க்கட்சியாக எங்களுக்கு உரிமை உள்ளது என்று ப.சிதம்பம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-23 09:07 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சி உள்ளன. இதையடுத்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரம் செய்யும் போது மதம், சாதி, இனம், மொழி குறித்து அவதூறு கருத்துகளை தவிர்க்குமாறு பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில், "இந்திய அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டுவிடும் என்பது போன்ற தவறான கருத்துக்களை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் தவிர்க்குமாறும். அக்னிவீர் திட்டம் குறித்து பேசும்போது நாட்டின் பாதுகாப்பு படைகளை அரசியலாக்க கூடாது." என்று கூறியுள்ளது.

இதற்கு பதலளிக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசியலாக்குவது என்றால் என்ன? விமர்சிப்பதை தேர்தல் ஆணையம் அரசிலாக்குவது என்று கூறுகிறதா?

அக்னிவீர் என்பது மத்திய அரசின் கொள்கையால் உருவாக்கப்பட்ட திட்டம், இந்த திட்டம் மற்றும் கொள்கை குறித்து விமர்சிக்கவும், எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை வழங்கினால், அந்த திட்டத்தை ஒழிப்போம் என்று பிரசாரம் செய்ய ஒரு எதிர்க்கட்சியாக எங்களுக்கு உரிமை உள்ளது.

இந்த திட்டம் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய வீரர்களை இரண்டு பிரிவாக பிரிக்கிறது, இது மிகவும் தவறானது. அக்னிவீர் திட்டத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள், நான்காண்டு பணியாற்றிவிட்டு, வெளியே தூக்கி எறியப்படுவார்கள், அவர்களுக்கு எந்த வேலையும், ஒய்வூதியமும் வழங்கப்படாது, இது மிகவும் மோசமான திட்டம்.

நமது ராணுவமே, இந்த அக்னிவீர் திட்டத்தை எதிர்க்கிறது, ஆனாலும் மத்திய அரசு இந்திய ராணுவத்தின் மீது இந்த திட்டத்தை திணிக்கிறது, இதுவும் மிகவும் தவறான செயல். எனவே, அக்னிவீர் திட்டம் நிச்சயம் அகற்றப்பட வேண்டியது அவசியம்.

காங்கிரஸ் கட்சிக்கு வழிகாட்டுதல் வழங்குவதில் தேர்தல் ஆணையம் மிகவும் தவறாக உள்ளது, ஒரு குடிமகனாக, தேர்தல் ஆணையம் மிகவும் தவறானது என்று கூறுவது எனது உரிமை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்