திருவேங்கடமுடையான் கோவில் வைகாசி பெருந்திருவிழா

காரைக்குடி அருகே உள்ள திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 14-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.

Update: 2022-06-06 18:30 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 14-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.

வைகாசி பெருந்திருவிழா

காரைக்குடி அருகே உள்ளது அரியக்குடி. இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

இதையொட்டி இந்த ஆண்டு வைகாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மதியம் 12.10 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு முன்பு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவேங்கடமுடையான் எழுந்தருளினார். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதன் பின்னர் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

தேரோட்டம்

விழாவையொட்டி தினந்தோறும் இரவு ஹம்சவாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், சொர்ணகருட வாகனம், வெள்ளி சேஷ வாகனம், யானை வாகனம், வெள்ளி மஞ்சனம், சொர்ணகுதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி சுவாமி அருள்பாலிக்கிறார். வரும் 11-ந்தேதி மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வரும் 14-ந்தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும், 15-ந்தேதி கோ ரதம், 16-ந்தேதி வெள்ளி ரதம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந்தேதி இரவு அலங்கார பங்களா தெப்பம் நிகழ்ச்சியும், மறுநாள் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் தொடர்ந்து 19-ந்தேதி மரக்குதிரை, கண்மாய்க்கரைப்பட்டி மண்டகப்படிதாரர் சார்பில் பல்லக்கும், 20-ந்தேதி குடிகாத்தான்பட்டி பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடாசலம் செட்டியார் தலைமையில் கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்