வைகோவுக்கு எலும்பு முறிவு: மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-26 10:40 GMT

சென்னை,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த தகவலை வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். எதிர்பாராதவிதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்