தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-13 19:30 GMT

நாமக்கல், மோகனூர், எலச்சிபாளையம் தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்ட பட்டபடிப்பு ஊதிய உயர்வினை மீண்டும் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தாலுகா பொருளாளர் குமார் நன்றி கூறினார்.

மோகனூர்

மோகனூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மோகனூர் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மோகனூர் தாலுகா தலைவர் அன்புராஜ் தலைமை தாங்கினார், தாலுகா செயலாளர் நல்லசிவம், தாலுகா பொருளாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வசித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். தலைவர் ராஜா, செயலாளர் குணசேகரன், பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்