அச்சத்தில் வாழும் ரோஹிங்கியா குழந்தைகள் கடத்தி விபசாரத்திற்கு விற்கும் கொடுமை
மியான்மரில் இருந்து வெளியேறி தஞ்சம் அடைந்து முகாம்களில் வசித்துவரும் ரோஹிங்கியா குழந்தைகள் கடத்தி விபசாரத்திற்கு விற்கும் கொடுமையால் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். #Rohingya
மியான்மரில் நடைபெற்ற இனக்கலவரத்தில், சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. இருக்க இடமில்லாமல் லட்சக்கணக்கானோர் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். அப்படித் தஞ்சம் அடைந்து முகாம்களில் வசித்துவரும் பெண்களைக் கடத்தல்காரர்கள் நெட்வொர்க் அமைத்து, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
அன்வாரா என்ற 14 வயது சிறுமி கலவரத்தில் தனது பெற்றோர்களை இழந்துவிட்ட நிலையில், மியான்மரை விட்டு அகதியாக வங்கதேசத்துக்கு தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு தெருவில் நின்றுகொண்டிருந்த இச்சிறுமியிடம், உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருகிறேன் எனக்கூறி பெண் ஒருவர் பாலியல் தொழிலுக்காக இரண்டு நபர்களிடம் விற்றுள்ளார். சிறுமியைப் பணம் கொடுத்து வாங்கிய அந்த இரண்டு இளைஞர்களும் கத்தி முனையில் அவளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதற்கு மறுக்கும் பட்சத்தில் கழுத்தில் கத்தியை வைத்து அடித்து உதைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் என 14 வயது சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
முகாம்களில் இதுபோன்ற அக்கிரமங்களும் அரங்கேறுகின்றன. முகாமுக்கு அருகிலேயே பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்கு விற்கப்படுகின்றனர்.
மற்றொரு பெண் கூறுகையில், வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்றவர்கள் என்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்தத் தொழிலையே செய்துவருகிறேன். இங்கு பிழைக்க வழியில்லை என்று கூறியுள்ளார். இந்த அவலத்தை ஆங்கில ஊடகம் ஒன்று களத்துக்குச் சென்று நேரடியாகப் பதிவு செய்து, இதுபோன்ற பாலியல் கடத்தல்காரர்களை கண்டுபிடித்து போலீசாரிடமும் ஒப்படைத்துள்ளது.