24–வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

இமயமலை பகுதியில் வசித்து வரும் ‘ஷெர்பா’ இன மக்கள், மலை ஏறுவதில் வல்லவர்கள்.

Update: 2019-05-22 00:00 GMT

காத்மாண்டு, 

‘ஷெர்பா’  இனத்தை சேர்ந்த கமி ரிடா ஷெர்பா (வயது 50) என்பவர், நேபாள நாட்டில் சொலுகும்பு மாவட்டம் தாமே கிராமத்தில் வசித்து வருகிறார். இவர், உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறும் வழக்கத்தை 1994–ம் ஆண்டு தொடங்கினார்.

நேற்று 24–வது தடவையாக எவரெஸ்டில் ஏறி, தனது சாதனையை தானே முறியடித்தார். நேற்று முன்தினம் இரவு நேபாள பகுதியில் 4–வது முகாமில் இருந்து ஏறத் தொடங்கினார். இந்திய போலீஸ் குழுவுக்கு வழிகாட்டியபடி அவர் சென்றார். நேற்று காலை 8 ஆயிரத்து 848 மீட்டர் மலை உச்சியை அடைந்தார். இதன்மூலம், உலகிலேயே அதிக தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்.

கடந்த 15–ந் தேதிதான், அவர் எவரெஸ்டில் 23–வது தடவையாக ஏறினார். ஒரே வாரத்துக்குள் 2–வது தடவையாக ஏறியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. 25 தடவையாவது எவரெஸ்டில் ஏறிவிட வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்று அவரது மலை ஏற்ற குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். 8 ஆயிரம் மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட வேறு சில மலை சிகரங்களிலும் கமி ஏறியுள்ளார்.

மேலும் செய்திகள்