எங்கள் நாடு மத நல்லிணக்கம் கொண்டது ; வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி

எங்கள் நாடு மத நல்லிணக்கத்தை பேணும் நாடு எனவும் அமித்ஷாவின் கருத்து தேவையற்றது எனவும் வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-12 04:14 GMT
டாக்கா,

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூற்றை நிராகரித்துள்ள வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி ஏகே அப்துல் மோமேன், மத நல்லிணக்கம் கொண்ட ஒரு சில நாடுகளில் வங்காளதேசமும் ஒன்று என தெரிவித்துள்ளார். 

வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி ஏகே அப்துல் மோமன் இது குறித்து கூறியதாவது ;   வங்காளதேசத்தில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாக அமித்ஷா கூறியது தேவையற்றது மற்றும் உண்மையற்றது.  வங்காளதேசத்தை போன்று  உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே மத நல்லிணக்கம் பேணப்படுகிறது. எங்கள் நாட்டில் சிறுபான்மையினர்கள் என யாரும் இல்லை. அனைவருமே சமமானவர்கள்தான்.   இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்தில் வந்து சில மாதங்கள் வாழ்ந்தால், இங்கு பின்பற்றப்படும்  மத நல்லிணக்கத்தை காண்பார்.

இந்தியாவிற்குள் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அவர்கள் அதை சரி செய்ய போராடட்டும். எங்களை பற்றி அவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. நட்பு நாடு என்ற முறையில், எங்களுடனான நட்புறவை பாதிக்கும் வகையிலான எந்த செயல்பாட்டையும் இந்தியா மேற்கொள்ளாது என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்