மியான்மரில் பீரங்கி தாக்குதலில் ரோஹிங்கியா பெண்கள் 2 பேர் பலி

மியான்மரில் நடந்த பீரங்கி தாக்குதலில் ரோஹிங்கியா பெண்கள் 2 பேர் பலியாயினர்.

Update: 2020-01-26 22:08 GMT
யாங்கூன்,

மியான்மரில் ராகைன் மாகாணத்தில் கடந்த 2017-ல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ரோஹிங்கியா இனத்தினர் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகைன் மாகாணத்துக்கு கூடுதல் சுயாட்சி கோரி அராக்கன் ராணுவம் என்ற பெயரில் ரோஹிங்கியா போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராகைன் மாகாணத்தில் உள்ள கின் தவுங் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை ரோஹிங்கியா போராளிகள் நடத்தியதாக ராணுவம் கூறுகிறது. ஆனால் அதனை மறுத்துள்ள போராளிகள் ராணுவமே தாக்குதலை நடத்திவிட்டு தங்கள் மீது புகார் கூறுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டு அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் கடந்த 23-ந்தேதி உத்தரவிட்ட நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்