தாய்லாந்தில் ராணுவ வீரர் திடீர் துப்பாக்கி சூடு; பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
தாய்லாந்து நாட்டில் ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
நாகோன் ராட்சசிமா,
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இதன் முன் கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ராணுவ வீரர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மக்களை நோக்கி தொடர்ச்சியாக சுட தொடங்கினார். இதில், 12 பேர் பலியாகி உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து அவர் பணய கைதிகளாக பலரை பிடித்து வைத்திருந்து உள்ளார்.
சம்பவம் நடந்த பகுதி அருகே புத்த கோவில் ஒன்றும் ராணுவ தளம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக அறிவிக்கப்பட்டது. இதன்பின்பு 4 பேரில் உடல்களை வணிக வளாகத்தில் இருந்து சிறப்பு படையினர் கண்டெடுத்தனர். 31 பேர் காயமடைந்து உள்ளனர்.
சந்தேகத்திற்குரிய அந்நபர் ஜக்ராபந்த் தொம்மா என அறியப்பட்டு உள்ளார். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை பிடிக்க போலீசார் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.